அன்று…
அவர்களை காணாமல்
என் மனம்
நிலவைக்காணாத வானமாய்
வெம்பிக்கிடந்தது.
எந்தநேரம்
நான் வீடு திரும்பினாலும்
முகம் கோணாமல்
என்னை வரவேற்கும்
அந்த மூவரும்
அன்று
என்னை வரவேற்க வரவில்லை.
நான் வீடு திரும்பும்
ஒவ்வொரு முறையும்
அவர்களை சுற்றியபடி ஒரு கூட்டம்
கும்மாளம் இட்டுக்கொண்டிருக்கும்
தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும்
என்னைச் சந்திக்க வரும்
தூதுவர்கள்… அவர்கள் மூவரைச்சுற்றிலும்
அமர்ந்து கொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள்.
நேரங்கடந்து வீடு வரும் நான்
அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல்
அவர்கள் மூவரையும் பார்த்தவுடன் பரவசம் கொள்வேன்.
அந்த பரவசத்திலும்….
சற்று பொறாமை கலந்திருக்கும்.
ஒரு மொழி மட்டுமே பேசத்தெரிந்த
என்னைச் சந்திக்கவரும் தூதுவர்களின்
பல பாஷைகளையெல்லாம் தெரிந்து வைத்து
அவர்களை வரவேற்று உபசரித்து
என்னைச் சந்திக்க வைக்கும்
அந்த மூவரைச்சுற்றிலும்
கூட்டம் கூடுவதில் வியப்பில்லை.
அந்த மூவரில்…
மூத்தவள்..
சற்று உடல் பருத்தவள்
பரந்த மனம் படைத்தவள்.
ஊரெல்லாம் என் உறவுதான்
என்று
உரிமை கொண்டாடி அடைக்கலம் நாடுவோருக்கு
யோசிக்காமலே இடம் தருவாள்.
இதனால்
மற்று இருவரையும் விட
இவளிடம் கூட்டம் சற்று அதிகமாகத்தானிருக்கும்.
இரண்டாவது பெண் மௌனி.
எப்போதாவது சிரிப்பாள்..
அந்த சிரிப்பு.. எல்லோர் மனதையுமே
வயது பேதம் பாராமல்
சஞ்சலப்படுத்துவதாய் இருக்கும்.
சிரிப்பதற்கும் கால நேரம் பார்க்கும்
இவளிடம் கூட்டம் சற்று குறைவாகத்தானிருக்கும்.
மூன்றாவது பெண்
உறுதியானவள்
உழைப்பதற்கு அஞ்சாதவள்
உறங்குவது முதல்
விழிப்பது வரை
என்னைக் கவனித்துக்கொள்வதில் கெட்டிக்காரி.
இவள் மீது மட்டும் எனக்கு சற்று கூடுதலான
அன்பு உண்டு.
இவளது முன்னோர்கள்
அந்தக்காலத்தில் ஏதோ ஒரு அரசனின்….
ஆசைநாயகிளாய் இருந்தவர்களாம்.
அந்த அரசனின் மார்பை தழுவியபடியே
அவனை விட்டு நீங்காமல் இருப்பார்களாம்.
இவர்களின் தழுவலைப்பார்த மற்ற மன்னர்களும்
அந்த அரசன் மீது பொறாமை கொண்டு
போர்தொடுப்பார்களாம்.
அப்படிப்பட்ட
வம்சத்தில் வந்த இவளை மட்டும்
ஏனோ எனக்கு மிகவும் பிடிக்கும்.
அன்று…
மிகுந்த வேளைப்பழுவினால்
வெளியில் சுற்றிவிட்டு வீடு திரும்ப
நேரமாகிவிட்டது.
கடுமையான காற்று மழை வேறு
மேகங்களின் வேகத்தைக்கண்டு
நிலவு முக்காடிட்டுக்கொண்டது.
கள்ளுண்டவனின் கண்களைப்போல்
மின் விளக்குகள் கண்களை மூடிக்கொண்டிருந்தன.
பொறாமை கொண்டோர் நெஞ்சைப்போல்
ஊர் இருளை போர்த்திக்கொண்டிருந்தது.
கருமியின் தானம்போல
மின்னலின் ஒளியில் கால்கள் பாதையை துழாவ
ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தேன்.
எப்பொழுது நான் வீடு திரும்பும்போதும்
மற்றவர்கள் கேலியும் சிரிப்புமாய்
கும்மாளமிட்டுக்கொண்டிருக்க
அவற்றை ரசித்தபடி
அந்த மூவரும் என்னை
இன்முகத்துடன் வரவேற்பார்கள்.
களைத்துச்சோர்ந்து கோபத்துடன் வரும் நான்
இவர்களது இன்முகம் கண்டதும் சமாதானமடைந்து
உணவை உண்டு விட்டு <உறங்கச்செல்வேன்.
நான் உறங்கும்போதும்
என் உறக்கத்தை சுகமாக்க
மூன்றாவது பெண் தன் சேலையால்
விசிறிக்கொண்டு நிற்பாள்.
அவளிடம்
எனது கண்களினால் பேசியபடியே
ஆனந்தமாய் நித்திரை அடைவேன்.
அதிகாலை…
எழுந்து பார்த்தால்…
அந்த மூன்றாவது பெண்ணே
எனக்கு முகம் காட்டுவாள்.
அந்த நேரத்திலும்
அவளைச்சுற்றிபடி
உற்சாக கூச்சலிட்டவாறு…
கூட்டமொன்று குதுகளித்தபடி இருக்கும்.
அவற்றை கண்டுகொள்ளாமல்
சூரியனைக் காணும் தாமரையாய்
என்னைக் கண்டதும் அவள் முகம் மலரும்.
இவளுக்கு
ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு.
மற்ற இருவரும் வெயிலைக்கண்டால் பயந்து நிற்க
இவள் மட்டும்
நாள் முழுவதும் வெயிலில் நின்றுகொண்டே
வீட்டு வரவு செலவுகளை கவனிப்பாள்.
நோய் என இவளை அணுகினாள்
தாயாய் இருந்து நோய் தீர்ப்பதில் வல்லவள் இவள்.
மூத்தவளை விட சற்று இளையவள் இவளது
உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால்….
அன்று இவர்கள் மூவரையுமே காணவில்லை.
பலூனுக்குள் அடைபட்ட காற்றாய்
விடை தெரியாத தவிப்பு மனதை
சிதறடித்துக்கொண்டிருந்தது.
எங்கு போய் தொலைந்தார்கள் மூவரும்?!
கும்மாளமிடும் கூட்டத்தையும் காணோமே?!
மயான அமைதி நிலவுகிறதே?
என்னவாயிற்று?
ஏதாவது விபரீதம்மோ?
என்று….
கேள்வி அலைகள்
சிந்தனையில் மோதிக்கொண்டிருந்தன.
சரி….
காலையில் பார்த்துகொள்வோம்
என
மனதுக்கு சமாதான மிட்டாயை கொடுத்தபடி
உறக்கத்தோட்டைக் கழற்றும் முயற்சியில்
இரவு உணவை உண்ணாமலே வெற்றிபெற்றேன்.
சூரியக்கதிர்கள் பூமிப்பந்தைத்தொட்ட
அதிகாலைப்பொழுதில்: என்
வீட்டு முன்பு ஒரே ஆராவாரம்.
உறக்கபோர்வையை < உதறிவிட்டு
திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன்….
கண்ணேதிரே கண்ட காட்சி……
என்
இதயத்துடிப்பை நிறுத்தி வைத்தது.
அவர்கள் …
மூவரும் கோரமாக அடிபட்டு பிணங்களாய்
சாலையில் கிடக்க…
வருத்தக்குறிகளுடன் மக்கள் வெள்ளம்
அவர்களைச் சுற்றி.
என்னசெய்வது?
விதிமுடிந்து விட்டது…
போக்குவரத்து தடைபடுகிறது…
சீக்கிரம் வரச்சொல்லுங்கள் ..ஆட்களை
ஆளுக்கு ஒரு பக்கம் தூக்குங்கள்…
அறுப்பது துரிதமாகட்டும்…
அதிகாரிகள் வந்த பிறகு சொல்லிக்கொள்வோம்…
என்று…
உத்தரவுகள் இட்டுக்கொண்டிருந்தவரைப்பார்த்தேன்..
நேற்று வரை
அவர்கள் மூவரின்
நிழலில் ஓய்வெடுத்த அவரின்
மனிதாபிமானம் கண்டு
என்னைப்பார்த்து
ஏதோ சொல்லிக்கொண்டிருந்தன
அந்த மரங்கள் மூன்றும்.