வருகை தந்தமைக்கு நன்றி..

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சிம்மசொப்பனம்..

                                                          சிம்மசொப்பனம்..                                                                   

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க, பிரான்ஸ், இங்கிலாந்து நேச நாட்டு படையணியின் ஹீரோயினாக போற்றப்படும்
ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, இங்கிலாந்து மக்களிடையே வர்ணிக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு தான் நான்சி ஹீரோயின். ஹிட்லருக்கு, அவர் கண்டுபிடித்தே தீரவேண்டிய ஒரு 'வெள்ளை எலி'.

நியூசிலாந்தில் பிறந்தது ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்த நான்சி வேக் உண்மையில் ஒரு ஊடகவியலாளர்.  Henri  Edmond Ficca எனும் பிரெஞ்சு காரரை திருமணம் செய்து கொண்ட்தன் மூலம், பிரான்ஸ் குடியுரிமை பெற்றுக்கொண்ட நான்சி மார்செயிலில் வசித்து வந்த போது,  நாசிப்படை பிரான்ஸ் மீது படையெடுத்தது. 1940 ம் ஆண்டு பிரான்ஸ், ஜேர்மன் படைகளிடம் வீழ்ந்த பின், தப்பியோடிய கேப்டன் லான் கரோவின் நெட்வேர்க்கில் நான்சியும் இணைந்து கொண்டார்.
அங்கிருந்து பிரெஞ்சு படை வீரர்களுக்கான தபால் பரிமாற்ற வேலை செய்து வந்ததுடன், நாசி படைகளில் உளவு பார்த்தல்,  நாசவேலை செய்தன் என்பவற்றில் ஈடுபட்டார். ஜேர்மனிய படையினரின் எங்கு ரெய்டு நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து  கொண்டு மாற்று வழி மூலம் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு படைவீரரை தப்பிக்க வைத்தார். ஜேர்மனிய ஆயுத பரிமாற்றல் போக்குவரத்தையும் நாசவேலை மூலம்  குழப்பினார்.

நான்சியின் தொலைபேசி உரையாடல்கள் சிலவற்றை ஒட்டுக்கேட்டதன் மூலமும்,  தகவல் பரிமாற்ற கடிதங்களை கைப்பற்றியதன் மூலமும், அவர் நேசப்படையணியின் ஒற்றராக செயற்படுவதாக உறுதி செய்து கொண்டது ஜேர்மன் படை.

இதையடுத்து ஹிட்லரின் புலனாய்வு படையான Gestapo வினால் 'வெள்ளை எலி' என தேடப்பட்டார்.  அவருடைய தலைக்கு 5 மில்லியன் பிராங்குகள் பரிசுத்தொகை அறிவித்தது Gestapo.

நான்சியின் கணவர் ஹென்ரி, கெஸ்டாபோவினால் பிடிபட்டார். நான்சியின் இடத்தை சொல்லும் படி அடித்து துன்புறுத்தி இறுதியில் அவரை சித்திரவதை செய்து படுகொலை செய்தனர்.  ஆனால்  நான்சி மறைந்திருக்கும் இடத்தை அவர் சொல்லவே இல்லை. ஆனால் நான்சி டொலூஸே எனும் இடத்தில் கைது செய்யப்பட்டார். சந்தர்ப்பவசத்தால் நான்கு  நாட்களில் விடுதலை செய்யப்பட்டார். தனது ஆறாவது முயற்சியில் பிரெனீஸ் மலைத்தொடரை கடந்து ஸ்பெய்னிற்குள் ஊடுருவினார்.

பின்னர் பிரிட்டனுக்கு  வந்து நேசநாடுகளின் சிறப்பு தாக்குதல் படையில் இணைந்தார். பின்னர் மீண்டும் பிரான்ஸுக்கு திரும்பினார். பரசூட் மூலம் அவொர்ய்ன் நகருக்குள் நுழைந்து, பிரான்ஸின் மேக்கி கொரில்லா படையின் கேப்டன் ஹென்ரி தார்டிவாட்டை சந்தித்தார். அங்கிருந்து நேசப்படையின் புகழ்பெற்ற நேர்மாண்டி படையெடுப்பு தாக்குதலில் பங்கேற்றார்.  மாண்ட்லுசோனில் உள்ள கெஸ்டாபோ தலைமையகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையிலும் பங்கேற்றார்.

நான்சி வழிநடத்திய 7000 மேக்கி கொரில்லா படையினர், ஹிட்லரின் 22,000 எஸ்.எஸ் படையினருடன் யுத்தம் புரிந்தனர். நான்சியின் தந்திரோபாய யுத்த நடவடிக்கைகளால், 1400 படையினரை வெறும் 100 பேர் கொண்டு அழிக்க முடிந்தது.  மேக்கி குழுவின் தலைவர் ஹெண்ட்ரி தார்விட், நான்சியின் சக்திவாய்ந்த யுத்த நெறிமுறையை கண்டு வியந்து போனார்.

ஒரு முறை எஸ்.எஸ். படையின் ரெய்டு நடவடிக்கை ஒன்றின் போது, நான்சி படையணியை கண்டுகொண்ட ஒரு படைவீரன் அலாரம் எழுப்பி எச்சரிக்கை செய்ய முயற்சித்தான். சட்டென அவன் மீது பாய்ந்த நான்சி சத்தமே இல்லாது அவனை கொன்றழித்தார். (1990ம் ஆண்டு தொலைக்காட்சி ஊடக பேட்டி ஒன்றின் போது எப்படி இதற்கு துணிவு வந்தது என அவரிடம் கேட்டனர். தன் கைகளை சட்டென கழுத்துக்கு கொண்டு வந்த அவர் இப்படித்தான் என செயல்முறை  ரீதியில் விளக்கம் அளித்தார்)

இன்னுமொரு முறை, படைநடவடிகையின் இரகசிய தகவல் கோர்டுக்கள் பரிமாறும் படைவீரர் ஒருவரை  ஜேர்மனி படைவீரர்கள் ரெய்டு நடவடிக்கை ஒன்றின் போது கொன்றுவிட்டனர்.  உரிய காலத்தில் அவை சென்றடைய வேண்டும் என்பதற்காக 800 கி.மீ தூரம் ஜேர்மனிய செக் பாயிண்டுக்களை கடந்து அத்தகவலை நேரிலேயே போய் தெரிவித்தார்.

1944ம் ஆண்டு நாசிப்படைகளிடமிருந்து பிரான்ஸ் முழுவதும் சுதந்திரமடைந்தது.
ஹிட்லரின் Gestapo புலனாய்வு பிரிவுக்கே சிம்ம சொப்பமனாக திகழ்ந்த நான்சியை பற்றி அதிகம் பேர் அறிந்திடாத விடயமொன்று
1933 ம் ஆண்டு வியென்னாவில் வைத்து அடோல்ஃப் ஹிட்லரை ஊடக  பேட்டி ஒன்று எடுத்தார் நான்சி. அப்போது தான் யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் எவ்வளவு குரோத மனப்பாங்கை கொண்டிருக்கிறார் என கண்டுகொண்டார். அவருடைய நாசிப்படைகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பது நான்சி அன்றெடுத்த சபதம் தான்!

மற்றும் படி அவருக்கும் யூதர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பின்னர் ஒரு தடவை அவர் கூறியது 'எனக்கு சொல்வதற்கு ஒன்று மட்டும் தான் இருக்கிறது. நான் பல ஜேர்மனியர்களை கொன்றொழித்தேன். ஆனால் மன்னித்துக்கொள்ளுங்கள். நான் இன்னும் அதிகமானவர்களை கொல்லவில்லை'
இரண்டாம் உலக யுத்தத்தில் நேசப்படைகளுக்காக போரிட்டு மிக உயரிய கௌரவம் பெற்றுக்கொண்ட ஒரு சிலரில் நான்சியும் ஒருவர். பிரான்ஸின் உயரிய விருதுகளில் ஒன்றான D'Honneur விருது, பிரிட்டனின் ஜோர்ட் மெடல், அமெரிக்காவின் சுதந்திரத்திற்கான விருதுகள் என்பன அவருக்கு கௌரவம் வழங்கி கொடுக்கப்பட்டன.
ஆனால் சமீபத்தில் தான் (1990 காலப்பகுதிக்கு பின்னரே) அவர் பிறந்து, வளர்ந்த நாடுகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றன அவரை கௌரவப்படுத்தி விருதுகள் வழங்க  முற்பட்டன.
யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆஸ்திரேலியாவின் பல பொது தேர்தல்களில் நான்சி போட்டியிட்ட போதும், துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவிக்கொண்டார்.
தனது இறுதிக்காலத்தில், இங்கிலாந்தில் வசித்தது வந்த அவர், லண்டனில் நேற்று முன் தினம் சனிக்கிழமை காலமானர். மத்திய பிரான்ஸில் தனது அஸ்தியை கலந்து விட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவருடைய உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, புகழ்பெற்ற நாவலாசிரியர் செபெஸ்டியன் ஃபோல்க்ஸ் உருவாக்கிய ஷார்லொட் கிரே நாவலும், அதே தலைப்பில் நடிகை கேட் பிளான்செட் நடித்து வெளியாகிய திரைப்படமும், சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள். நான்ஸியை நேரடியாக உங்கள் மனதில் நிலை நிறுத்தி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
                                                           நன்றி ஸாரா 4 தமிழ்மீடியா
Download As PDF

கருத்துகள் இல்லை: